சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

இரண்டாம் ஆயிரம்   திருமங்கை ஆழ்வார்  
பெரிய திருமொழி  

Songs from 948.0 to 2031.0   ( )
Pages:    Previous   1  2  3    4  5  6  7  8  9  10  Next  Next 10
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள்-தன்
      பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று
      தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்-
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த
      செம்பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே



[982.0]
தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி
      திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த
      பனி முகில் வண்ணன் எம் பெருமான்-
காரணம்- தன்னால் கடும் புனல் கயத்த
      கரு வரை பிளவு எழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே



[983.0]
வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும்
      விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும்
      எந்தை எம் அடிகள் எம் பெருமான்-
அந்தரத்து அமரர் அடி-இணை வணங்க
      ஆயிரம் முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே



[984.0]
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த
      மன்னவன் பொன் நிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா
      உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்து இட்ட வெம் திறல் சாபம்
      தவிர்த்தவன்-தவம்புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே



[985.0]
Back to Top
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க்
      குரை கடல் உலகு உடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த
      உம்பரும் ஊழியும் ஆனான்-
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு
      அவனியாள் அலமரப் பெருகும்
மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே



[986.0]
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானை
கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி
      கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்
      வானவர் உலகு உடன் மருவி
இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்
      இமையவர் ஆகுவர் தாமே



[987.0]
கலையும் கரியும் பரிமாவும்
      திரியும் கானம் கடந்துபோய்
சிலையும் கணையும் துணையாகச்
      சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி
      மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான்
      சாளக்கிராமம் அடை நெஞ்சே



[988.0]
கடம் சூழ் கரியும் பரிமாவும்
      ஒலி மாத் தேரும் காலாளும்
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை
      பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்-
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில்
      இமையோர் வணங்க மணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய
      சாளக்கிராமம் அடை நெஞ்சே



[989.0]
உலவு திரையும் குல வரையும்
      ஊழி முதலா எண் திக்கும்
நிலவும் சுடரும் இருளும் ஆய்
      நின்றான் வென்றி விறல் ஆழி
வலவன் வானோர்-தம் பெருமான்
      மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன்-சலம் சூழ்ந்து அழகு ஆய
      சாளக்கிராமம் அடை நெஞ்சே



[990.0]
Back to Top
ஊரான் குடந்தை உத்தமன்
      ஒரு கால் இரு கால் சிலை வளையத்
தேரா அரக்கர் தேர்-வெள்ளம்
      செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான்
      பிறங்கு சிறை வண்டு அறைகின்ற
தாரான்-தாரா வயல் சூழ்ந்த
      சாளக்கிராமம் அடை நெஞ்சே



[991.0]
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு
      அலற அவள் மூக்கு அயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி
      விண்ணோர் பெருமான் நண்ணார்முன்
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்
      கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத்
தடுத்தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய
      சாளக்கிராமம் அடை நெஞ்சே



[992.0]
தாய் ஆய் வந்த பேய் உயிரும்
      தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி உருவின்
      குறளாய்ச் சென்று மாவலியை
ஏயான் இரப்ப மூவடி மண்
      இன்றே தா என்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன்-
      சாளக்கிராமம் அடை நெஞ்சே



[993.0]
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள்
      அரி ஆய் பரிய இரணியனை
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த
      ஒருவன் தானே இரு சுடர் ஆய்
வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய்
      மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்
தான் ஆய் தானும் ஆனான்-தன்
      சாளக்கிராமம் அடை நெஞ்சே



[994.0]
வெந்தார் என்பும் சுடு நீறும்
      மெய்யில் பூசி கையகத்து ஓர்
சந்து ஆர் தலைகொண்டு உலகு ஏழும்
      திரியும் பெரியோன்-தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன
      இலங்கு அமுது நீர் திருமார்வில்
தந்தான்-சந்து ஆர் பொழில் சூழ்ந்த
      சாளக்கிராமம் அடை நெஞ்சே



[995.0]
Back to Top
தொண்டு ஆம் இனமும் இமையோரும்
      துணை நூல் மார்வின் அந்தணரும்
அண்டா எமக்கே அருளாய் என்று
      அணையும் கோயில் அருகு எல்லாம்
வண்டு ஆர் பொழிலின் பழனத்து
      வயலின் அயலே கயல் பாயத்
தண் தாமரைகள் முகம் அலர்த்தும்
      சாளக்கிராமம் அடை நெஞ்சே



[996.0]
தாரா ஆரும் வயல் சூழ்ந்த
      சாளக்கிராமத்து அடிகளை
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்
      கலியன் ஒலிசெய் தமிழ்மாலை
ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார்
      அமரர் நல் நாட்டு அரசு ஆளப்
பேர் ஆயிரமும் ஓதுமின்கள்
      அன்றி இவையே பிதற்றுமினே



[997.0]
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்
      மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை எனக் கருதி
      பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி
      இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்



[998.0]
சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்-
      திறத்தனாய் அறத்தையே மறந்து
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி
      போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை ஆயனே மாயா
      வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்



[999.0]
சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து
      சுரி குழல் மடந்தையர்திறத்துக்
காதலே மிகுத்து கண்டவா திரிந்த
      தொண்டனேன் நமன்-தமர் செய்யும்
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் வேலை
      வெண் திரை அலமரக் கடைந்த
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்



[1000.0]
Back to Top
வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து
      பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன்-தமர் பற்றி
      எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையை பாவீ
      தழுவு என மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்



[1001.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song